யாழ் பண்டத்தரிப்பில் இரு மனித எச்சங்கள் மீட்பு.
ஜன 26, 2012
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன. படையினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இளவாலை பண்டத்தரிப்பு பிரதான வீதியில் ரேஞ்ச் அடி என்ற இடத்தில் இருந்து இந்த இரு எலும்புக்கூடுகளும் இளவாலைப் காவல்துறையினர் மீட்டுள்ளார்கள்.
சில மாதங்களுக்குள் இறந்தவர்களுடைய எலும்பு எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றபோதும், முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே அதனை உறுதிப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கிணற்றில் நீர் வற்றி விட்டதால் அப்பகுதி விவசாயிகள் அதனைத் துப்புரவு செய்தனர். கிணற்றினுள் இறங்கியவர்கள் அதற்கு மனித மண்டையோடுகளைக் கண்டனர். உடனடியாக இளவாலைப் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மல்லாகம் நீதிவான் கே.கஜநிதிபாலன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அவரது பணிப்பின் பேரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
இரண்டு மண்டையோடுகளும் எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டன. ஆண்களின் உள்ளாடைகளும் மேலாடையும் கூடக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் பயன்படுத்துவது போன்ற தோற்றமுடைய பச்சை நிறத்திலான துணியும் கிணற்றிலிருந்து கிடைத்துள்ளது. ஒரு மண்டையோட்டினுள் சிதைவடையாத நிலையில் மூளை காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நேற்று மாலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்

















